கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எடுக்கும் நடவடிக்கைகளில் 30நாட்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் நிதி முழுமையாக நிறுத்தப்படுமென ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வைரஸ் தொடர்பான விபரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றார்.
மேலும் இந்த வைரஸின் தீவிர தன்மை குறித்து ஏனைய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் ட்ரம்ப் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாகவும் கூறினார்.
இதற்கிடையில் கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வகிப்பு மற்றும் வைரஸ் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்தது தொடர்பாக விரிவான மதிப்பீடு செய்ய கடந்த மாதம் ட்ரம்ப் தனது நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் அடுத்த 30நாட்களில் பெரும் அளவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அவ்வாறு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் இந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படுமென பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.